Monday, August 3, 2020

எங்கோ அநியாயம்

கதிரவன் பணிமுடிந்து களைப்புடன் கடற்கரையோரம் ஒதுங்கினான்.
பனிப்பூக்கள் படர்ந்து நெடுஞ்சாலையை போர்த்தியிருந்தது. பழக்கமில்லாத இரப்பர் சக்கரம் வழுக்கிச்சென்று வெண்பனிச் சகதியில் சிக்கிக் கொண்டது. முகப்புக் கண்ணாடியில் கல்லறையில் அடுக்கும் செங்கல் உயர்வதுபோல பனிமூட ஆரம்பித்தது. எதற்கும் அஞ்சாத எனக்கே கொஞ்சம் உதறல் கண்டது. 

ஒருவழியாக கதவைத் திறந்து கொண்டு, சாலையில் இறங்கி நடந்தேன். ஏதாவது கார் வந்தால் உதவி கேட்கவேண்டும் என்று எண்ணியவாறு சாலையின் இருபுறமும் பார்த்தவாறு நின்றிருந்தேன். அப்போது வெள்ளை நிற அமெரிக்க கார் ஒன்று வெளிச்சத்தை உமிழ்ந்து பனித்தூசியை பந்தாடியபடி வந்து கொண்டிருந்தது. உதவிகேட்டு கையை உயர்த்தினேன். ஏழடி உயரமும் நாலடி அகலமும் உள்ளவர் காரிலிருந்து இறங்கி அருகில் வந்தார். 

அவரை அருகில் பார்த்தவுடன் பனிக்குளிரிலும் வியர்த்தது எனக்கு. இந்தக் காரை நிறுத்தியது தவறோவென மனதிற்குள் சிறு போராட்டம் வந்தாலும், எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று இன்னொரு மனம் தைரியம் சொன்னது. இறங்கி வந்தவர் என் கார் அருகே வந்து பார்த்தார். எல்லா சக்கரமும் நன்றாக பனிக்குள் சிக்கியுள்ளது, இதை நம்மால் வெளியில் எடுக்க முடியாது. ஏதாவது அருகில் உள்ள சாலையோரக் கடையில் சென்று விசாரிப்போம் வா என்று அழைத்தார். எனக்கும் அந்த சூழ்நிலையில் இதைத் தவிர வேறு எந்த யோசனையும் தோன்றாத தால், சரியென்று அவர் காரில் ஏறிக் கொண்டேன்.

கார் என்னையும் ஏற்றிக்கொண்டு விரைந்து சென்று சாலையோரக்கடை ஒன்றின் முன் நின்றது. அங்கிருந்த கடையில் எனது கார் சிக்கிய விபரத்தைச் சொல்லி அதை வெளியில் எடுக்க உதவும் கம்பெனியின் தொலைபேசி எண்ணை வாங்கினார். அவரே பனியகற்றி உதவுவோரை அழைத்து விரைந்து வருமாறு தொலைபேசியில் பேசினார். பிறகு என் பக்கம் திரும்பி சாப்பிட ஏதாவது வேண்டுமாவெனக் கேட்டார். உடனே எனது பேண்ட் பாக்கெட்டில் கைவைத்தேன். பாக்கெட்டில் வாலட் இல்லாததை கையுணர காரில் விட்டுவந்தது ஞாபகம் வந்தது. அழைத்து வந்தவர் அதை அறிந்து தேநீரும் சிற்றுண்டியும் அவரது கார்டிலேயே வாங்கிக் கொடுத்தார். அவர் நடந்து கொண்ட விதம் கண்டு அவரைப் பற்றி எழுந்த எண்ணங்கள் சுத்தமாக மாறியது. அவரது உருவத்தை வைத்து அவரை தவறாக எண்ணியது நினைத்து என்மேலே எனக்கு வெறுப்பு வந்தது. இதற்கிடையில் கடையின் வெளியே பனியகற்றும் வாகனம் வந்துவிட, அவரிடம் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன். 

அப்போது காவல்துறை வாகனமொன்று விரைந்து வந்து பார்க்கிங்கில் நின்றது. அதிலிருந்து இறங்கிய இரண்டு காவலர்கள்  கடையின் உள்ளே வேகமாக நுழைந்தனர்.  என்னவாக இருக்கும் ஒருவேளை நம் காரை சாலையில் பார்த்து விட்டு நம்மைத் தேடித்தான் வருகிறார்களோ என்று எண்ணியபடி ஓட்டுனரின் அருகில் உட்கார்ந்திருந்தேன். சற்று நேரத்தில் உள்ளேயிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் வந்தது. அதைக் கேட்டவுடன் என் இதயம் நெஞ்சுக்கூட்டிலிருந்து சில நொடிகள் வெளியில் வந்துவிட்டுப் போனமாதிரி இருந்தது. உன்னோடு நின்ற அந்த ஆளைச் சுட்டுவிட்டனர் காவலர்கள் என்று எனது வாகன ஓட்டுனர் ஆங்கிலத்தில் சொன்னார். என்னால் அதை கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. உலகில் எங்கோ அநியாயம் நடக்கிறது என்று எண்ணியபோது வாகனம் அந்த இடத்தை கடந்திருந்தது.

#வாஞ்சிவரிகள்#

No comments:

Post a Comment

அமெரிக்காவில் வாங்கிய இடம்

  தலைப்பு: அமெரிக்காவில் வாங்கிய இடம்   ஹூஸ்டன் நகரம். அழகான அமைதியான பகல் பொழுது. எத்தனையோ ஹரிக்கேன்களையும் வெள்ளங்களையும் பார்த்துவிட்டு அ...