குறுந்தொகை #3 எளிய வடிவில்
மலையரசி மடியில் தவழ்ந்து
ஈராறு ஆண்டிற்கொருமுறை பிறந்து
கருங்காம்பு நுனியில் கவிழ்ந்து
குறிஞ்சிப்பூ பெற்றடுத்த தேசத்து
கொம்புத்தேன் களிப்போடு குடித்து
செம்புத் தோள் புடைத்த என் தலைவா !
நின்பால் கொண்ட நட்பு அளவிடற்கரியது
நினைப்பிற்கு அப்பால் நீண்டு நிற்கும்
நிலத்தினும் பெரிது
விஸ்வரூபம் எடுத்தாலும் விரிந்து கிடக்கும்
வானினும் உயர்ந்தது
பூமித்தாயின் அடியை தொட்டு உரசும்
பெருங்கடலின் பேராழத்தை விட பெரியது !!
#வாஞ்சிவரிகள்#
குறுந்தொகை 3, தேவகுலத்தார் , குறிஞ்சித் திணை - தலைவி சொன்னது
நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று,
நீரினும் ஆரளவின்றே , சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
No comments:
Post a Comment